கார்ட்லைஃப் தொப்புள்கொடி ரத்த வங்கியின் இயக்குநர் அவை, புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.
விதிமீறல்கள் நடந்திருக்கக் கூடும் என்று என்று நம்பப்படுவதால் காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.
கார்ட்லைஃப் நிறுவனம், உள்விசாரணையையும் நடத்தி வருகிறது.
கார்ட்லைஃபின் 22 ரத்த கொள்கலன்களில் ஏழு சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்படவில்லை என்று சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஒரு கொள்கலனில் (டேங்க் ஏ) 2,200 தொப்புள்கொடி ரத்த அலகுகள் (யூனிட்) மூல உயிரணு (ஸ்டெம் செல்) மாற்று சிகிச்சைக்குப் பயன்படாது என்பது தெரியவந்தது.
“விசாரணைக் குழு நியமித்த ஒருவர், எங்களிடம் நடத்திய விசாரணையில் வெளியான முதற்கட்ட முடிவுகள், கைவசம் இருக்கும் தகவல்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளும்போது டேங்க் ஏ விவகாரத்தில் எங்களின் முன்னாள் ஊழியர்கள் தவறு இழைத்ததற்கான ஆதாரம் இருப்பதாக இப்போதைக்கு விசாரணைக் குழு நம்புகிறது,” என்று கார்ட்லைஃப் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 18) தெரிவித்தது.
இச்சம்பவம் எப்படி நடந்தது என்பதை அறியவும் வருங்காலத்தில் மீண்டும் இவ்வாறு நடப்பதைத் தவிர்க்கவும் விசாரணைக் குழுவை ஈடுபடுத்தியதாகவும் கார்ட்லைஃப் குறிப்பிட்டது.
தங்கள் இயக்குநர்கள் இருவரை ஈடுபடுத்தாமல் காவல்துறையிடம் புகார் அளித்ததாகவும் அது தெரிவித்தது.
திரு ஸாய் லிங்யுன், திருவாட்டி சென் சியாவ்லிங் ஆகிய இருவரும் நான்ஜிங் சின்ஜியெகுவோ கடையின் நியமன இயக்குநர்கள் ஆவர். அக்கடை, கார்ட்லைஃபில் 20.3 விழுக்காடு பங்கு வைத்துள்ளது..
இந்த விவகாரம் குறித்து மேல்விவரங்களைத் திரட்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளது.
இதுவரை டேங்க் ஏ மட்டுமின்றி மற்றொரு கொள்கலன் உள்ளிட்டவற்றில் 7,500 தொப்புள்கொடி ரத்த அலகுகள் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எஞ்சிய ஐந்து கொள்கலன்களில் இருக்கும் கிட்டத்தட்ட 14,000 தொப்புள்கொடி ரத்த அலகுகளுக்கு அதிக பாதிப்பு இருக்காது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முழுமையான முடிவுகளைப் பெற பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. பரிசோதனைகளின் முடிவுகள் ஓராண்டு காலத்தில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.