தொப்புள் கொடி ரத்த வங்கியான ‘கார்ட்லைஃப்’இன் தலைமை நிதி அதிகாரி தெட் இன் யீ மார்ச் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் பிணையில் வெளிவந்தார்.
இந்தத் தகவலை ‘கார்ட்லைஃப்’ நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.
தொப்புள் கொடி ரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட சில ரத்தப் பெட்டிகளில் குளருபடி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெட் இன் யீ மீது வழக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து தலைமை நிதி அதிகாரியாக செயல்படுவார் என்று ‘கார்ட்லைப்’ தெரிவித்தது.
‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் தெட் இன் யீ. நிறுவனத்தில் எல்லோருக்கும் தெரிந்த நபர். பல ஆண்டுகளாக நிறுவனத்தின் நிதி தொடர்பான தகவல்களைத் தெரிந்தவர். தற்போது நாங்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு உதவுவதிலும் தெட் இன் யீ பங்கு அதிகம் உள்ளது என்று ‘கார்ட்லைப்’ நிறுவனம் கூறியது.
மார்ச் 22ஆம் தேதி ‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர் அவையில் உள்ள நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.