தொப்புள் கொடி ரத்த சேமிப்பு தொடர்பாக தகவல்களை வெளியிடும் கடமையில் இருந்து தவறியதற்காக கார்ட்லைஃப் நிறுவன குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான டான் போ லான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் அந்த நிறுவனத்தின் நான்கு இயக்குநர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தனியார் தொப்புள் கொடி ரத்த வங்கியில் உள்ள ஏழு சேமிப்புக் கிடங்குகள் ஏற்புடைய அளவைவிட அதிகமான வெப்பத்தில் இருந்ததை சுகாதார அமைச்சு கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தெரிவித்திருந்தது.
அது முதல் கார்ட்லைஃப் நிறுவனம் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளது.
இதனால், 2,150 வாடிக்கையாளர்களின் தொப்புள் கொடி ரத்த சேமிப்பு பாதிப்படைந்திருந்தது. மேலும், 17,050 வாடிக்கையாளர்களின் ரத்த சேமிப்பு பாதிப்படையக்கூடிய நிலையில் இருந்தது.
கார்ட்லைஃப் ரத்த சேமிப்பு வங்கி நிறுவனத்தில் வெப்பநிலை குறைபாடுகள் இருப்பது அந்த நிறுவனத்தின் இயக்குநர் சபைக்கு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுட்டிக்காட்டப்பட்டு இருந்ததும் பின்னர் தெரியவந்தது.
திருவாட்டி டானுடன் நிறுவனத்தின் தற்காலிக தலைவர் ஹோ சூன் ஹாவ், சுயேச்சை இயக்குநர்களான இயோ ஹுவீ தியோங், டைட்டஸ் ஜிம் சியோங் டக் யான் ஆகியோரும் நிர்வாகப் பொறுப்பு இல்லாத இயக்குநரான சாவ் வாய் லியோங் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் வெளியிட்ட அந்த நிறுவனம், வர்த்தக விவகாரத் துறையிலிருந்தும் சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் இருந்தும் ‘செக்கியூரிட்டிஸ் அண்ட் ஃபியூச்சர்ஸ் ஆக்ட்’ என்ற பங்குப் பத்திரங்கள், மற்றும் எதிர்கால கைமாற்றச் சட்டத்தின்கீழ் காவல் துறை விசாரணைக்குத் தேவைப்படுவதாகக் கூறி சில ஆவணங்கள், தகவல்களைக் கோரும் கடிதம் கிடைக்கப் பெற்றதாக வெள்ளிக்கிழமை (மார்ச் 22) அன்று தெரிவித்தது.
அதில் கேட்கப்பட்ட சில ஆவணங்களைத் தான் ஒப்படைத்துவிட்டதாக நிறுவனம் கூறியது.
இந்நிலையில், தொப்புள் கொடி ரத்தத்தை எடுக்க, பரிசோதிக்க, சேமித்து வைக்க, அல்லது அதன் தொடர்பில் நோயாளிகளிடம் புது வகையிலான பரிசோதனைகளை செய்யவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி நிலைமையை சரிசெய்ய கார்ட்லைஃப் நிறுவனம் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
இதுபற்றி விவரித்த கார்ட்லைஃப் நிறுவனத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி ஐவன் இயூ பாங், நிறுவனத்தின் நடைமுறைகளில், நிபுணர்களின் உதவியுடன் தரநிலைகளை உயர்த்த கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதில், நிறுவனத்துக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கும் நோக்கில், தான் சுகாதார அமைச்சுடன் அணுக்கமாக பணியாற்ற உள்ளதாக திரு இயூ கூறினார்.