தோக்கியோ: ஜப்பானில் டொயோட்டா நிறுவனம் தனது பிரீயஸ் வகை கார்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.
இவ்வகை கார்களின் பின்பக்கக் கதவு கைப்பிடிகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக இந்தத் தயாரிப்பைத் திரும்பப்பெற டொயோட்டா முடிவுசெய்துள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் புதன்கிழமை (ஏப்ரல் 17) ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு நவம்பர் 24ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஏப்ரல் 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட 135,305 பிரீயஸ் வகை கார்களை டொயோட்டா நிறுவனம் திரும்பப் பெறுவதாக ஜப்பானின் போக்குவரத்து அமைச்சு முன்னதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், பிரீயஸ் கார்களுக்கான தரப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஜப்பானில் இயங்கும் தனது சுட்சுமி ஆலையில் உற்பத்தியை டொயோட்டா நிறுத்தியது என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.