புவிவெப்பத்தின் (ஜியோதர்மல்) மூலம் மின்சாரம் விநியோகிக்க சிங்கப்பூரின் ஆற்றலை ஆராயும் ஈராண்டு ஆய்வு இவ்வாண்டு பிற்பாதியில் தொடங்கும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளது.
இந்த ஆய்வின் மதிப்பு 16 மில்லியன் வெள்ளி என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர், தான் பயன்படுத்தும் எரிசக்தியில் பசுமை எரிசக்தியைச் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்டுள்ளது. அதற்கு வகைசெய்யும் எல்லா வாய்ப்புகளையும் சிங்கப்பூர் கருத்தில்கொண்டுள்ளது. இந்நிலையில் தீவின் புவிவெப்ப ஆற்றலை அறிவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
செம்பவாங், தெக்கோங் தீவு ஆகிய பகுதிகளில் புவிவெப்ப ஆற்றல் இருக்கக்கூடும் என்று ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்தது.
அத்தகைய ஓர் ஆய்வு சென்ற 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சர்பானா ஜூரோங் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள மியூனிக் தொழில்துறைப் பல்கலைக்கழகத்தின் பன்முக ஆய்வுத் தளமான டம்கிரியேட் ஆகியவை அந்த ஆய்வை நடத்தின.
செம்பவாங் வெப்ப நீரூற்றுக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் வெப்பநிலை 200 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று அந்த அய்வில் தெரியவந்தது. நிலத்தடியில் நான்கிலிருந்து ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் மின்சார உற்பத்திக்கு அந்த வெப்பநிலை அவசியமானது.
சிங்கப்பூர் முழுவதும் நிலத்தடியில் 10 கிலோமீட்டர் வரையிலான ஆழத்தில் புவிவெப்ப ஆற்றலை ஆராய இடையூறு விளைவிக்காத வகையில் ஆய்வை நடத்தப் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு எரிசக்திச் சந்தை ஆணையம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அழைப்பு விடுத்தது.
இம்மாதத் தொடக்கத்தில் அதற்கான ஏலக்குத்தகை 16 மில்லியன் வெள்ளிக்கு சர்பானா ஜூரோங் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.
ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்படும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடனான கூட்டு முயற்சிகள் தொடருமா போன்ற கேள்விகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சர்பானா ஜூரோங்கிடம் கேட்டது. சர்பானா ஜூரோங் அவற்றுக்குப் பதிலளிக்க மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.