வட்டார அளவில் நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட நிதித் தேவைகளை மேலும் நன்றாகப் பூர்த்திசெய்யும் நோக்குடன் ஊழியர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவ சிங்கப்பூர் அரசாங்கம், நிதித் துறையில் 35 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளது.
பசுமை நிதி மையமாக உருவெடுப்பது சிங்கப்பூரின் இலக்காகும். அந்த வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விற்பனை, பொருள் மேம்பாட்டு (புரோடக்ட் டிவெலப்மன்ட்) போன்ற வேலைகளைச் செய்யும் ஊழியர்கள் இனி கணிசமான அளவில் நீடித்த நிலைத்தன்மை அம்சத்துடனான நிதிப் பொறுப்புகளையும் கவனிக்கவேண்டியிருக்கும். சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வங்கி, நிதிக் கழகமும் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்தது.
ஆசியான் வட்டாரத்தில் நீடித்த நிலைத்தன்மையுடனான நிதிச் சந்தையின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் நான்கிலிருந்து ஐந்து டிரில்லியன் வெள்ளியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குத் தேவையான உருமாற்றத்துக்கு மெருகூட்டுவதில் நிதி நிலையங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மை அம்சத்துடனான நிதித் தேவைகளில் எரிசக்தி, கட்டுமான, சொத்துச் சந்தைத் துறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மறுபயனீட்டு எரிசக்தியை விநியோகிப்பு, மின்சார விநியோகிப்பு, வர்த்தகக் கட்டடங்களைப் பசுமைக் கட்டடங்களதாக மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் அதற்குக் காரணம்.
அதனால் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அடுத்த மூன்றாண்டுகளில் சிங்கப்பூரின் நிதிச் சேவைத் துறை ஊழியர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூர் வங்கி, நிதிக் கழகம், சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளும் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) குறிப்பிட்டன.
கேபிஎம்ஜி சிங்கப்பூர் அமைப்பு வரைந்த வேலை உருமாற்றத் திட்ட அறிக்கையின்படி (ஜாப்ஸ் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மேப் ரிப்போர்ட்), சுமார் 20 வேலைகளைச் செய்வோர் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான தேவை அதிகம் இருக்கிறது. குறிப்பாக விற்பனை, வர்த்தக உறவு (ரிலேஷன்ஷிப் மேனேஜ்மன்ட்) ஆகியவை சார்ந்த வேலைகளுக்கு இது பொருந்தும்.
மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் 4,000லிருந்து 5,000 புதிய நீடித்த நிலைத்தன்மை அம்சத்துடனான புதிய வேலை வாய்ப்புகள் தேவைப்படும் என்றும் அந்த அறிக்கை கணித்துள்ளது.