64 ஆகாயப் படைவீரர்கள், 124 ராணுவ வீரர்கள், 23 கடற்படை வீரர்கள் என சிங்கப்பூர் ஆயுதப்படையின் அதிகாரியாகப் பயிற்சி பெற்றவர்கள் மொத்தம் 211 பேர் சனிக்கிழமை மார்ச் 9ஆம் தேதியன்று பதவி நியமனம் பெற்றனர்.
சிங்கப்பூர் ஆயுதப் படை ராணுவப் பயிற்சி நிலையத்தில் நடந்த 132/23 பயிற்சி அதிகாரிப் பதவி நியமன அணிவகுப்பிற்கு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, அணிவகுப்புச் சடங்கை மேற்பார்வையிடும் அதிகாரியாக வருகையளித்தார்.
“அதிகாரிகளாகப் பொறுப்பேற்கும் நீங்கள், உங்கள் அச்சம், எல்லையைச் சோதிக்கும் பல சூழல்களையும் சந்திப்பீர்கள். அவற்றைக் கடந்து உங்கள் வீரர்களை நன்கு பார்த்துக்கொள்ளவேண்டும்,” என அறிவுறுத்தினார் அமைச்சர் ஃபூ.
பதவி நியமனம் பெற்ற 64 ஆகாயப் படைவீரர்களில் தலைசிறந்த வீரராக, இரண்டாம் லெஃப்டினன்ட் கார்த்திக் மணிகண்டன் சம்பத், 25, ‘கெளரவ வாள்’ விருதைப் பெற்றார்.
சிறுவரின் கனவு, இளையரின் சாதனை
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில்தான் தன் எதிர்காலம் என சிறுவயதிலேயே நிர்ணயித்தார் கார்த்திக்.
“நாடு உனக்கென்ன செய்ததென்று கேட்காதே; நீ நாட்டிற்கென்ன செய்தாய் என்று கேள் என்பதை என் பெற்றோர் அடிக்கடி எனக்கு நினைவுபடுத்துவர். அது என்னுள் இருந்த நாட்டுப்பற்றை வெளிக்கொணர்ந்தது,” என்கிறார் கார்த்திக்.
சிங்கப்பூரின் ராணுவ வரலாறும் வான்வெளித் தற்காப்பு உத்திகளும் இவரது சிந்தையைக் கவர்ந்து இலட்சியத்திற்கு உரமாகின.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் துறையில் படித்தார்.
தேசிய சேவையில் முதல் தளபத்திய படைப் பிரிவில் சேவையாற்றிய கார்த்திக், அதை முடித்ததும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் முழுநேர வீரராக சேர்ந்தார்.
விமானப் போர்த்திற அதிகாரி (ஆகாயத் தற்காப்பு ஆயுத நிபுணத்துவம்) பயிற்சியை மேற்கொள்ள இவர் பயிற்சி அதிகாரிப் பள்ளிக்குச் சென்றார்.
அங்கு தன் நிபுணத்துவத்தின் சக ஆகாயப் படைவீரர்களில் தலைசிறந்த போர்வீரர், உடலுறுதிச் சோதனையில் தலைசிறந்த வீரர் ஆகிய விருதுகளை இவர் பெற்றார்.
உடற்கட்டோடு இருக்க ஆகாயப் படையின் முறையான திட்டங்கள் கைகொடுத்ததாகவும் தன் சக வீரர்களுடன் ஓட்டங்களுக்கும் உடற்பயிற்சிக் கூடத்துக்கும் அடிக்கடி செல்வதாகவும் கூறினார் கார்த்திக்.
தற்காப்புக் கலைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ள இவர், அக்கிடோவில் மூத்த கறுப்புப் பட்டை, முவே தாயில் இரண்டாம் நிலை ஆகியவற்றை அடைந்துள்ளார்.
“சிங்கப்பூர் ஆயுதப்படை, அற்புதமான கற்றல் தளமாகவும் எதிர்கால வளர்ச்சிக்கு உன்னதமான இடமாகவும் விளங்குகிறது,” என்றார் கார்த்திக்.