அம்மா எலி தன் குஞ்சுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பூனை ஒன்று வருவதைப் பார்த்ததும் அம்மா எலி, “மகனே! வேகமாக என்னுடன் ஓடிவா. எதிரே இருக்கும் பொந்துக்குள் புகுந்துகொள்வோம்,” என்று கூறி ஓடத் தொடங்கியது.
அம்மா எலி, வேகமாக ஓடி பொந்துக்குள் புகுந்தது. ஆனால் எலிக்குஞ்சினால் அம்மா வேகத்திற்கு ஓட முடியவில்லை. பூனை எலிக்குஞ்சு அருகில் வந்துவிட்டது.
“இன்று நாம் இந்த பூனையிடம் நன்கு மாட்டிக்கொண்டோம்,” என்று பயத்துடன் தன்னுடைய கண்களை இறுக மூடிக்கொண்டு எலிக் குஞ்சு பயத்துடன் நின்றது.
அப்போது அருகில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டது.
நாயின் சத்தத்தைக் கேட்ட பூனை வேகமாக அங்கிருந்து ஓடி மறைந்தது.
எலிக்குஞ்சு, ‘தெய்வம்போல இந்த நாய் வந்து நம்மைக் காப்பாற்றியது. அதற்கு நன்றி சொல்லவேண்டும்,’ என்று சுற்றுமுற்றும் பார்த்தது. ஆனால் எங்கும் நாயைக் காணவில்லை.
அப்போது அங்கு வந்து சேர்ந்தது அம்மா எலி.
“அம்மா! நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அது குரைத்ததால்தான் பூனை என்னை விட்டுவிட்டு ஓடியது. அதற்கு நன்றி சொல்லவேண்டும் அம்மா! ஆனால் அதைக் காணவில்லை!” என்று வருத்தத்துடன் கூறியது.
அதைக் கேட்டதும் அம்மா எலி, “எனக்கு அந்த நன்றியைச் சொல். நான்தான் நாயைப்போல குரைத்தேன்,” என்று சிரித்துக்கொண்டே சொன்னது.
அதைக் கேட்டதும் எலிக்குஞ்சு ஆச்சரியத்துடன் அன்னையை நிமிர்ந்து பார்த்தது.
“ஆமாம் மகனே! ஒரு மொழி மட்டும் தெரிந்து வைத்துக்கொள்ளக்கூடாது. மற்றொரு மொழியும் தெரிந்ததால்தான் இப்போது நாம் தப்பித்தோம்,” என்றது.
“ஆமாம் அம்மா! உங்களைப்போல மற்றொரு மொழியையும் எனக்கு கற்றுக்கொடுங்கள் அம்மா,” என்று கூறியது.
நாமும் நேரம் கிடைக்கும்போது மற்ற மொழிகளையும் கற்றுக்கொண்டால் நிறைய மற்ற மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். அத்துடன் பிற்காலத்தில் வேலை வாய்ப்பும் எளிதாக கிடைக்கும்.