சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வசதி படைத்த சமண தம்பதியர் கிட்டத்தட்ட ரூ.200 கோடியை நன்கொடை அளித்துத் துறவறம் பூண்டனர். இப்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பாவேஷ் பண்டாரியும் அவருடைய மனைவியும் பிப்ரவரியில் நடந்த சடங்கு ஒன்றில் தங்கள் செல்வங்கள் அனைத்தையும் நன்கொடையாக வழங்கினர். இம்மாதப் பிற்பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் துறவு வாழ்க்கையை அதிகாரபூர்வமாக ஏற்பர்.
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலதிபரான பாவேஷ், தம் 19 வயது மகள், 16 வயது மகனின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறார். அவர்கள் 2022ல் துறவறம் பூண்டனர்.
ஏப்ரல் 22ஆம் தேதி துறவற உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர், குடும்ப உறவுகளை அத்தம்பதியினர் துண்டிக்க வேண்டும்.
அவர்கள் இரண்டு வெள்ளை ஆடைகள், பிச்சை எடுப்பதற்கான ஒரு கிண்ணம், ஒரு ‘ராஜோஹரன்’ (சமணத் துறவிகள் அமரும் இடத்தில் பூச்சிகளை விலக்க பயன்படுத்தும் ஒரு துடைப்பம்) மட்டுமே வைத்திருக்கலாம். அவர்கள் பின்பற்றும் அகிம்சைப் பாதையை இது குறிக்கிறது.
பண்டாரி தம்பதியினர், 35 பேருடன் நான்கு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்று அங்கு தங்களது கைப்பேசி, குளிர்சாதனம் உள்ளிட்ட அனைத்து உடைமைகளையும் நன்கொடையாக வழங்கினர்.
அரச குலத்தாரைப்போல உடையணிந்து ரதத்தின் மீது அத்தம்பதியர் நிற்பதை ஊர்வலத்தின் காணொளிகள் காட்டுகின்றன.
அளப்பரிய செல்வங்களுக்குப் பெயர்பெற்ற பண்டாரி குடும்பத்தின் இந்த முடிவு மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.