சூரத்: சமண சமயத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள், விளையாட்டாளர்கள் உட்பட 75 பேர் துறவறம் பூண்டனர்.
நேற்று 29ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத் நகரில் நடந்த நிகழ்ச்சியின்போது எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள், இல்வாழ்க்கைக்கு விடைகொடுத்து துறவு வாழ்க்கைக்கு மாறினர்.
அவ்வாறு துறவறம் பூண்டவர்களில் 15 பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஐந்து நாள் தீட்சை மகோற்சவப் பெருவிழாவின்போது, 40,000 பக்தர்கள் முன்னிலையில் 75 பேர் துறவறம் பூண்டனர். சூரத், அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக 75 பேர் துறவிகளாகிவிட்டனர்,” என்று அவ்விழாவை ஏற்பாடு செய்த அமைப்பு தெரிவித்தது.
துறவு வாழ்க்கைக்கு மாறிய அவர்கள் ஏழு முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களில் 70 விழுக்காட்டினர் இளையர்கள் என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டது.