தமிழ்மொழி விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ‘இன்பத்தமிழும் ஆற்றல்மிகு இளைய தலைமுறையும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இளையர் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரின் நினைவு அங்கமாகவும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி இடம்பெற்ற நிகழ்ச்சியை இந்திய முஸ்லிம் பேரவை ஏழாவது முறையாக நடத்தியது. செம்பவாங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பல இந்திய குடும்பங்களில் இருக்கும் சிறுவர்கள் தமிழில் உரையாடத் தயங்குவதைக் குறுநாடக வடிவில் திருமதி நர்கிஸ் பானு வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசும் கலை அரங்கம் தொடங்கியது.
மாணவர்களுக்குத் தமிழில் பேச வாய்ப்பு அளிக்கும் நோக்கில் நடைபெற்ற கலை அரங்கத்தை அவைத்தலைவர் முனைவர் மன்னை க. இராஜகோபாலன் வழிநடத்தினார்.
வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றித் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவரான அ. முஹம்மது பிலால் தலைமையுரையாற்றினார். நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி சம்ரிதி முத்து சரவணன் உள்ளூர் சிறப்புப் பேச்சாளர் என்ற முறையில் தமிழ்மொழி கற்றுத்தரும் விழுமியங்கள், அதன் தனித்துவம் மற்றும் சிறப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளராகத் தன்முனைப்புப் பேச்சாளர், ஆராய்ச்சி விஞ்ஞானி மற்றும் பேராசிரியரான முனைவர் சுல்தான் ஹலீபா அல் ரஷீத் உரையாற்றினார்.
வெளிநாட்டில் படித்த பிறகு அங்கு பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தமிழ்மொழி ஒட்டியும் தனது ஆராய்ச்சிகளைப் பற்றியும் உரையாடி நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தார்.