நமது தாய்மொழியை என்றும் மறவாமல் அதை வாழும் மொழியாகக் காக்க நமது பங்கை ஆற்ற வேண்டும் என்ற கருத்தை இளையர்களிடத்தில் சேர்க்கும் எண்ணத்தோடு தமிழர் பேரவை ‘தமிழோடு வளர்வோம்’ என்ற கருத்தரங்கிற்கு ஏப்ரல் 20ஆம் தேதி ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் டி. சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் தமிழர் பேரவையின் துணைத் தலைவருமான முனைவர் முஹைதீன் நிசார் அன்வர் வரவேற்புரையாற்றினார்.
வெவ்வேறு வேலையிடங்களிலும் தமிழ்ப் புழக்கம் தேவைப்படும் என்பதைத் தொடக்கநிலை 5, 6 மற்றும் உயர்நிலை 1, 2 மாணவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக நான்கு ஆற்றல் வாய்ந்த இளையர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் வாசுதாஸ், ‘லவ் அண்ட் லைட்’ அறக்கட்டளை மற்றும் ‘சுவிஃப்ட் அக்கவுன்டிங் பிஐ’யின் நிறுவனர் கனகேஸ்வரி மோஹன தாஸ், மூத்த ஆய்வாளர் மற்றும் பல்கலைக்கழக இணையாசிரியர் காளிச்சரண் வீரசிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
செய்திப் படைப்பாளர் இலக்கியா செல்வராஜி, நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத் தன் வேலையிடத்தில் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்திய சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதன்பின் மேலும் ஆழ்ந்த கருத்தாடலை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு மாணவர்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இந்தக் கருத்தாடல் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால் வழிநடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக நான்கு பேச்சாளர்களைக்கொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
“தமிழ் பேசுவதற்குச் சிரமப்பட்டாலும், விடாமல் முயற்சி செய்து பேச வேண்டும்,” என்று தமிழர் பேரவையின் மேலாண்மை குழு உறுப்பினரும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான திருமதி வெள்ளிநிலா குணாளன் வலியுறுத்தினார்.
“நமது தமிழ்மொழியை மேலும் புரிந்துகொண்டு கற்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்ட இதுபோன்ற நிகழ்ச்சிகள் துணைபுரிகின்றன,” என்றார் பாசிர் ரிஸ் க்ரெஸ்ட் உயர்நிலைப்பள்ளியின் மாணவர் லோகித் பிரசாந்த்தராஜ், 13.