நியூயார்க்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களைக் கொலம்பியா பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்து வருகிறது.
நியூயார்க் வளாகத்தில் மாணவர்கள் முகாம்களை அமைத்துப் போராடி வருகின்றனர். இவற்றை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக் கழகத்தின் இவி லீக் பள்ளி தெரிவித்தது.
“மாணவர் போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் கல்லூரித் தலைவர்களுக்கும் இடையே பல நாள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் முகாம்களை அகற்ற மறுத்துவிட்டனர்,” என்று பல்கலைக்கழகத் தலைவர் நெமட் மினோஷ் ஷஃபிக் தெரிவித்தார்.
ஏப்ரல் 29ஆம் தேதி, மாணவர்களுக்குப் பல்கலைக்கழகம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் பிற்பகல் 2.00 மணிக்குள் (சிங்கப்பூர் நேரப்படி ஏப்ரல் 30ஆம் தேதி அதிகாலை 2.00 மணி) முகாம்களை அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் பங்கேற்பவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். நல்ல நிலையில் கல்வியை முடிக்கும் தகுதியை இழந்துவிடுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் “எங்களுடைய பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்பை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை இடைநீக்கம் செய்து வருகிறோம்,” என்று ஏப்ரல் 29 தேதி மாலை, பல்கலைக்கழத்தின் பேச்சாளர் பென் சாங் கூறினார்.