வாஷிங்டன்: இஸ்ரேலிய ராணுவத்தின் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வெவ்வேறு சம்பவங்களில் மனித உரிமைகளை மீறியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கண்டறிந்துள்ளது. இருப்பினும், அப்பிரிவுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்றும் அது தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்கா கண்டறிந்துள்ள சம்பவங்கள் அனைத்தும் இஸ்ரேல் - காஸா போருக்கு முன்பு காஸாவுக்கு வெளியே நடந்தவை என்று கூறப்பட்டது.
இதில் தொடர்புடைய நான்கு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீது இஸ்ரேல் நடவடிக்கை எடுத்ததாகவும் ஐந்தாவது பிரிவைக் குறித்துக் கூடுதல் தகவல் அளித்துள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.
இதன்மூலம், இஸ்ரேலிய ராணுவத்தைச் சேர்ந்த அந்த ஐந்து பிரிவுகளும் அமெரிக்க ராணுவ உதவிக்குத் தகுதி பெற்றுள்ளன என அது மேலும் குறிப்பிட்டது.
இஸ்ரேலின் முக்கிய ராணுவ ஆதரவாளராக அமெரிக்கா விளங்குகிறது. ஆண்டுக்கு $3.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களையும் தற்காப்பு அமைப்புகளையும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.
அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலிய ராணுவப் பிரிவின்மீது குற்றம் சுமத்துவது இதுவே முதல்முறை.
இஸ்ரேலிய ராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பாதுகாப்புப் படைப் பிரிவுகள் மனித உரிமைகளைக் கடுமையாக மீறியுள்ளன என அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வேதாந்த் படேல் கூறினார்.
இவற்றில் நான்கு பிரிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பங்காளித்துவ நாடுகளிடம் இத்தகைய நடவடிக்கைகளைத்தான் அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “மீதமுள்ள ஒரு பிரிவின்மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நாங்கள் இஸ்ரேல் அரசாங்கத்துடன் தொடர்ந்து ஆலோசனை செய்துவருகிறோம்,” என்று அவர் கூறினார்.