செய்தித்தாள், இணையப்பக்கம், சமூக ஊடகம் என்று 88 ஆண்டுகளாகப் பல தளங்களில் வாசகர்களோடு இணைந்துள்ள தமிழ் முரசு நாளிதழ், மற்றொரு தளமான திறன்பேசிச் செயலியை அறிமுகம் செய்தது.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தமிழ் முரசு செயலியை லிட்டில் இந்தியாவில் அக்டோபர் 29, 2023ல் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
வாசகர்கள் இலவசமாக தமிழ் முரசு செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். கைவிரல் அசைவில் செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
திறன்பேசிச் செயலி வடிவம் என்பது தமிழ் முரசுக்கும் அதன் வாசகர்களுக்கும் பல ஆண்டுக் கனவு.
புதிய அமைப்பு முறையின்கீழ் கிடைத்த அரசாங்க ஆதரவும் தமிழ் முரசின் நிறுவனமான எஸ்பிஎச் ஊடக குழுமத்தின் உத்வேகமும் இந்தக் கனவை நனவாக்க வழிவகுத்தன.
ஓர் ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த செயலி குறித்த கருத்தாய்வு, வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம், செய்தித் தயாரிப்பு என்று பல முயற்சிகள் கைகூடி செயலி இன்று செயல்பட்டு வருகிறது.
செய்திகள், முக்கிய நடப்பு விவகாரங்கள், தமிழ்ச் சமூக நிகழ்வுகள், ஒரு நிமிடக் காணொளிகள், சுவைச் செய்திகள், உணவு, வீட்டு வைத்தியக் குறிப்புகள், நிகழ்ச்சிகள் குறித்த கலந்துரையாடல்களை வழங்கும் வலையொளிகள் என்று பல அம்சங்களை உள்ளங்கைக்குக் கொண்டு வருகிறது இந்த செயலி.
செயலியின் சில முக்கிய அம்சங்கள்:
- செய்தியை ஒலி வடிவில் கேட்கலாம்.
- செய்தியை சேமித்துவைத்து பிறகு படிக்கலாம்.
- செய்தியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம்.
- ஒரு நிமிடத்தில் முக்கியத் தகவல்களை வழங்கக்கூடிய விரைவுச்செய்திகள்.
- சிந்திக்க தூண்டும் வலையொளிகள்.
- கண்கவர் படச் செய்திகள்.
செயலி தொடர்ந்து மேம்பாடு காணும்.
கருத்தாய்வுகள், கருத்துகணிப்பு, உரையாடல்கள் ஆகிய வழிகளில் மக்களின் கருத்துகள் திரட்டப்பட்டு, செயலியை மேலும் பல வழிகளில் தமிழ் முரசு மேம்படுத்தும்.
நிகழ்வுகள், செய்திகள் தமிழ் முரசு செயலியில் இடம்பெற தமிழ் முரசுக்கு மின்னஞ்சல் வழியாக விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்: tamilmurasu@sph.com.sg
தமிழ் முரசு நாளிதழ் 1935ஆம் ஆண்டு தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. முதலில் ஊழியர்கள் கைகளால் ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்து வார்த்தைகளை உருவாக்கி அவற்றைப் பக்கமாக ஆக்கி தமிழ் முரசு வெளிவந்தது.
பிறகு சென்ற நூற்றாண்டின் இறுதியில் கணினி முறைக்கு கட்டம் கட்டமாக மாறியது. பின் தனியார் துறையிடம் இருந்து எஸ்பிஎச் நிறுவனத்தின் வசம் தமிழ் முரசு சென்றது.
தொடர்ந்து ஏராளமான மாற்றங்களைக் கண்டு அவற்றில் மேலும் ஒன்றாக இப்போது செயலி வடிவிலும் தமிழ் முரசு வெளிவருகிறது.
செம்மொழியான தமிழ், அரசு மொழியாகக் கோலோச்சும் சிங்கப்பூரில், தேசிய தனித்தன்மையுடன் ஒட்டுமொத்த சமூகத்திற்கு உறுதுணையாக, தமிழர்களின் அடையாளமாக, தமிழர்களின் சின்னமாக, தமிழர்களின் குரலாக தமிழ் முரசு தமிழ் மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஒலித்து வரும்.
தமிழ் முரசு செயலியை ஆப்பிள் செயலியகம், கூகல் செயலியகம் ஆகியவற்றில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.