சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ஊட்டிக்கு நாள்தோறும் ஏறக்குறைய 20 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதையடுத்து, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அவ்விரு மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஊட்டிக்கு நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. அவற்றுள் 1,300 சுற்றுலாப் பயணிகளுக்கான வேன்கள் ஆகும். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் வெகுவாக அதிகரித்துள்ளது.
எனவே, கொடைக்கானலின் இயற்கைச் சூழலுக்கு குந்தகம் ஏற்படக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு திங்கள்கிழமை விசாரிக்கப்பட்டது.
அப்போது, முன்னிலையான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து ஐஐடி சென்னை, பெங்களூரு ஐஐஎம் ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், 20 ஆயிரம் வாகனங்கள் சென்றால் ஊட்டியில் நிலைமை மோசமாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், உள்ளூர் மக்களால் நடமாட இயலாது என்றும் சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலையுடன் குறிப்பிட்டனர்.
“ஐஐடி, ஐஐஎம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட ‘இ-பாஸ்’ நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும்,” என நீதிபதிகள் உத்தரவிட்டனர் என இந்து தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.
‘இ-பாஸ்’ வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.