சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் ரூ.1,309.52 கோடி மதிப்புள்ள பணம், தங்கம் உள்ளிட்ட பரிசுப் பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இது கடந்த 28ஆம் தேதி வரையிலான நிலவரம் என்று குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் ஆகியோருடன் இணைந்து மத்திய வருமான வரித்துறையினரும் பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் மூன்று தரப்பினரும் மாநிலம் தழுவிய அளவில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்து ரொக்கப் பணம், தங்கம் என பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து உள் மாவட்டங்களில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அதே சமயம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருந்ததால், தமிழக எல்லையோர மாவட்டங்களில் சோதனை நடவடிக்கைகள் நீடித்தன.
இந்நிலையில், முத்தரப்பினரும் நடத்திய சோதனைகளில் ஏப்ரல் 28ஆம் தேதி காலை 9 மணி வரை ரூ.179.91 கோடி ரொக்கம், ரூ.8.6 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் ரூ.1,083.78 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.35.80 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.1,309.52 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் செய்்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ரூ.950 கோடி மதிப்புள்ள 1,425 கிலோ தங்கத்தினால் ஆன பொருள்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. எனினும் தகுந்த ஆவணங்களை காண்பித்ததால் அவை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் திருப்பி அளிக்கப்பட்டதாக சத்யபிரதா சாகு மேலும் கூறினார்.
வாக்கு எண்ணிக்கை: ஆணையர்கள் ஆய்வு
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய இருவரும் திங்கட்கிழமை இரவு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையில் மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அம்மையங்களிலும் இதுவரை பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என்றும் ஆணையர் சந்தீப் ரத்தோர் தெரிவித்தார்.