சென்னை: தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் 15 விழுக்காடு வேட்பாளர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.
ஜனநாயக சீர்திருத்தச் சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
இது குறித்து சென்னையில் இயங்கி வரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் 945 வேட்பாளர்கள் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அவற்றுள் 135 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக குற்றவழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 15 விழுக்காடு வேட்பாளர்கள் குற்ற வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 81 பேர் மீது (அதாவது 8 விழுக்காட்டினர்)மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளன.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்குபவர்களில் சுமார் 28% மீது குற்ற வழக்குகள் உள்ளன.
அதிமுக வேட்பாளர்களில் 35%, பாஜக வேட்பாளர்களில் 70%, திமுக வேட்பாளர்களில் 59%, பாமக வேட்பாளர்களில் 60%, காங்கிரஸ் வேட்பாளர்களில் 78% குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்,” என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.