மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) நள்ளிரவுக்குப் பின் நடைபெற்ற காலிறுதிச் சுற்றின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) குழு 4-1 எனும் கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் ரஃபின்யா பார்சிலோனாவுக்கு முதல் கோல் அடித்தார். இருப்பினும் ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ரொனால்ட் உராகோவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
அதனால் பார்சிலோனா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிஎஸ்ஜி 40, 54, 61, 89 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது.
முதல் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்துக்காக காத்திருக்கும் பிஎஸ்ஜி குழுவுக்கு இந்த வெற்றி பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு காலிறுதிச் சுற்றின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் ஜெர்மனியின் பொருஷியா டோர்ட்மண்ட் குழு 4-2 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவை வென்றது.
இரண்டு அணிகளும் சமபலத்தில் இருந்தாலும் டோர்ட்மண்ட் அணி துடிப்புடன் விளையாடி வெற்றியை கைப்பற்றியது.
ஒரே நாளில் இரண்டு ஸ்பானிய அணிகள் அரையிறுதி வாய்ப்பைத் தவறவிட்டதால் அந்நாட்டு காற்பந்து ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.