புதுடெல்லி: கடந்த ஆண்டின் பரபரப்பான ஆட்ட அட்டவட்டணையால் தாம் சோர்வடைந்ததன் காரணமாகவும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஓய்வெடுக்க விரும்புவதாலும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டியிலிருந்து தாம் விலகியதாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா, 32, விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸம்பா, இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
நடப்பு ஐபிஎல் பருவத்தில் ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாடவிருந்தார். ஆனால், கடந்த மாதம் அப்போட்டியில் இருந்து அவர் வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இவ்வாண்டின் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாவது முறையாக கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் உள்ள ஆஸ்திரேலியா, குழுப் பிரிவில் ஓமான், இங்கிலாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.