வேலை-வாழ்க்கைச் சமநிலை பற்றிய அதிருப்தியே ஊழியர்கள் ஒரு நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணம்.
இவ்வேளையில் சம்பளம், அதைவிட முக்கியமான காரணியாக மாறியுள்ளது என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறைந்தது 200 ஊழியர்களைக் கொண்ட சிங்கப்பூரின் 250 தலைசிறந்த முதலாளிகளின் பட்டியலில், தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சும் உலகளாவிய ஆய்வு நிறுவனமான ஸ்டேடிஸ்டாவும் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான கூகல், இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் ஆசியா பசிபிக் பிரூவரிஸ் சிங்கப்பூர் (ஹெய்னெக்கன் ஆசியா பசிபிக்), ஜெர்மானியப் பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸ், மோட்டோரோலா சொல்யூஷன்ஸ் சிங்கப்பூர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
27 தொழில்துறைகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இணையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் முதலாளிகளை மதிப்பிட்டது. ஒவ்வோர் ஊழியரும் தனது சொந்த முதலாளியைப் பரிந்துரைக்க விரும்புவதும் தங்கள் தொழில்துறை சார்ந்த மற்ற முதலாளிகளைப் பரிந்துரைக்க விரும்புவதும் அவ்விரு அம்சங்கள்.
ஆடை, உயிரியல் தொழில்நுட்பம், உணவுத் தொழில்துறைகளைச் சேர்ந்த முதலாளிகள் அதிக ஒட்டுமொத்த மதிப்பெண்களை எட்டினர்.
ஊழியர்கள் தங்கள் வேலை-வாழ்க்கைச் சமநிலை குறித்து எவ்வளவு திருப்தி அடைந்தார்களோ அவ்வளவு தங்கள் முதலாளிகளை மற்றவர்களுக்குப் பரிந்துரைக்க அவர்கள் விருப்பம் காட்டுவதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.