கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 388,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இருவருக்கு நிம்மதி கிடைத்தது.
திரு ஐசாக் லாய் ஸி யாவ், திரு டேரன் ஸெங் ஷாவ் ரோங் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 18) மீட்டுக்கொள்ளப்பட்டன. அதோடு, அவர்கள் மீது இனி மீண்டும் அதே குற்றச்சாட்களை சுமத்தமுடியாது. இருவருக்கும் வயது 43.
அவர்கள் ஈடுபட்ட வழக்குகளில் இந்த முடிவுக்கான காரணங்களை அறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தைத் தொடர்புகொண்டுள்ளது.
திரு லாய், துரு ஸெங் உள்ளிட்ட நால்வர் மீது 2020ஆம் அண்டு நவம்பர் மாதம் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஓங் ஜியாஜியெ, ஜெரிமி யு ஜின் ஹான் ஆகியோர் மற்ற இருவர்.
யுக்கு லஞ்சம் வழங்க திரு லாயும் திரு ஸெங்கும் ஓங்குடன் இணைந்து செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. யு அப்போது லயன் சிட்டி ரென்டல்ஸ் நிறுவனத்தின் விற்பனைச் செயல்பாட்டு மேலாளராகப் பணியாற்றினார்.
ஓங் ஜியாஜியெக்கு அப்போது 32 வயது. ஜெரிமி யு ஜின் ஹானுக்கு வயது 41ஆக இருந்தது.
அவ்விருவருக்கும் 2021ஆம் ஆண்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.