சிங்கப்பூரில் வர்த்தக நிகழ்ச்சிகள் சூடுபிடிக்கும் வேளையில் சந்திப்புகள், ஊக்குவிப்புகள், மாநாடுகள், கண்காட்சிகளுக்கு (மைஸ்) உலகின் ஆகச் சிறந்த இடமாகத் திகழ சிங்கப்பூர் விரும்புகிறது.
உலகின் ஆகச் சிறந்த ‘மைஸ்’ நகரம் என்ற நிலையை சிங்கப்பூர் எட்ட உதவ, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் உலகளாவிய இயக்கம் மார்ச் இறுதியில் முதலில் அறிவிக்கப்பட்டது.
சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 17) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் இந்த நிலைப்பாடு மறுஉறுதிப்படுத்தப்பட்டது.
2013க்குப் பிறகு முதல்முறையாக பிரிட்டனுக்கு அப்பாற்பட்டு விரிவுபடுத்தப்பட்ட இந்த வர்த்தகக் காட்சிக்கு இரண்டு நாள்களில் 1,000க்கும் மேற்பட்ட தொழில்துறை நிபுணர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தில் கண்காட்சிகள், மாநாடுகளுக்கான நிர்வாக இயக்குநர் போ சி சுவான், ‘மைஸ்’ துறையில் வர்த்தகம் சூடுபிடிப்பதாகக் கூறினார். உள்ளூர் அளவில் நடத்தப்பட்ட வர்த்தக, பயண நிகழ்வுகள் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய எண்ணிக்கையை விஞ்சிவிட்டன.
கழகத்தின் புதிய இயக்கம் ஒரே விருப்பம் கொண்ட தொழில்துறைப் பங்காளிகளை அழைக்கும் விதத்தில் அமைவதாகச் சொன்ன திரு போ, அவர்களுடன் இணைந்து பணியாற்றி நிகழ்வுகளின் மதிப்பைக் கூட்ட முடியும் என்றார்.
“இவற்றை சிங்கப்பூரிலேயே செய்ய முடியும்,” என்று திரு போ சொன்னார்.
கழகம் அறிமுகம் செய்யும் ஆறு உலகளாவிய இயக்கங்களில் இந்த இயக்கம் முதலிடத்தைப் பெறுகிறது.