உள்துறை அமைச்சு இவ்வாண்டு அறிமுகப்படுத்த இருக்கும் இன நல்லிணக்கச் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகள் நாடப்படுகின்றன.
பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டங்கள் தற்போதைய சட்டத்தில் உள்ள இனம் தொடர்பான குற்றங்களை மறுஆய்வு செய்வதுடன் அவற்றை ஒருங்கிணைக்கும்.
அத்துடன், இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் அளவில் தெரிவிக்கப்படும் கருத்துகளைத் தடுக்கும் உத்தரவுகளும் அறிமுகப்படுத்தப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த இன ரீதியிலான அமைப்புகளின் தாக்கங்களிலிருந்து சமுதாயத்தைக் காக்க சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இன, சமய நல்லிணக்கம் சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியம் என்று ஏப்ரல் 16ஆம் தேதியன்று உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
இன, சமய நல்லிணக்கம் மேலோங்கி இருக்க, சிங்கப்பூர் தனிநாடானதிலிருந்து அதற்குத் தேவையான முயற்சிகளை சட்டம், கொள்கைகள் போன்றவை மூலம் பேரளவில் மேற்கொண்டுள்ளதாக அறிக்கை தெரிவித்தது.
சமய நல்லிணக்கத்தை நிலைநாட்ட சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் 1990ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் 2019ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
புதிய மசோதாவின் முதல் அம்சம் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களிலிருந்து இனம் தொடர்பான குற்றங்களை இடமாற்றம் செய்து மறுஆய்வு செய்வதாகும்.
இன நல்லிணக்கத்திற்கு எதிரான மிரட்டல்கள் இவற்றில் அடங்கும்.
இன அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க புதிய மசோதா பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இன அடிப்படையில் குறிப்பிட்ட அமைப்புகள் அல்லது அவற்றின் உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்க தூண்டுவோருக்கு எதிராகப் புதிய குற்றப் பிரிவுகளைப் புதிய மசோதா பரிந்துரை செய்துள்ளது.
இன நல்லிணத்துக்கு எதிரான கருத்துகளை எதிர்கொள்வது புதிய மசோதாவின் இரண்டாவது அம்சமாகும்.
சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவிப்பவர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க இது வகை செய்யும்.
வெளிநாடுகளைச் சேர்ந்த இன அடிப்படையிலான அமைப்புகளால் சிங்கப்பூரில் பாதிப்பு ஏற்படாதிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது புதிய மசோதாவின் மூன்றாவது அம்சமாகும்.
குறிப்பிட்ட இனத்தின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படும் உள்ளூர் அமைப்புகள், வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து நன்கொடை பெற்றால் அதுகுறித்து தெரிவிக்க வேண்டும்.
அவற்றின் தலைவர்களைப் பற்றிய விவரங்களையும் அவை தெரிவிக்க வேண்டும்.
வெளிநாட்டுத் தாக்கம் ஏற்படாமல் இருக்க உள்துறை அமைச்சர் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தலாம்.
சமூகங்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டால் அதைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே புதிய மசோதாவின் இறுதி அம்சமாகும்.
இதுதொடர்பாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, இதர சமூகப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.