துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து மே 15ஆம் தேதி பிரதமர் பதவியை ஏற்பார் என அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், “1505” எனும் நான்கு இலக்க (4D) எண்ணை ஏற்பதை சிங்கப்பூர் பூல்ஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) நிறுத்திக்கொண்டது.
ஏப்ரல் 17, ஏப்ரல் 20, ஏப்ரல் 21 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் 4D குலுக்கலுக்காக அந்த எண் விற்கப்பட்டுவிட்டதாகக் கண்டறியப்பட்டது.
புதன்கிழமை குலுக்கலுக்காக 1505 என்ற எண் திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கெல்லாம் விற்று முடிந்துவிட்டதாக தோ பாயோ லோரோங் 1ல் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கிளை ஊழியர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
பந்தயம் கட்டுபவர்கள் சிலர் நூற்றுக்கணக்கான வெள்ளி செலுத்தி அந்த எண்ணை வாங்கியதாக அவர் சொன்னார்.
4D எண் ஒன்றை எத்தனை முறை எடுக்கலாம் என்பதில் வரம்பு இருப்பதாக சிங்கப்பூர் பூல்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது. வரம்பை எட்டியவுடன் அந்தக் குறிப்பிட்ட எண்ணை எடுக்க இயலாது.