நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் பேசியது தெரிந்தும் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் என்கிற முறையில் திரு சிங் அதைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து திரு சிங்கிடம் விசாரணை நடத்தியபோது அவர் பொய் சொன்னதாகக் கூறப்படுகிறது.
தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் திரு சிங் மறுத்து, வழக்கு விசாரணை கோரியுள்ளார்.
தம்மைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
எனவே, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி திரு சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னது நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $7,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மார்ச் 19 காலை 10.45 மணிக்கு திரு சிங் அரசு நீதிமன்றத்தை அடைந்தார்.
அப்போது அவர் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதைக் கேட்ட திரு சிங்,” அரசு நீதிமன்றத்துக்கு ஒருவர் ஏன் செல்வார்?” என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பினார்.
குற்றம் சுமத்தப்பட்ட பிறகு அவரிடம் இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதுகுறித்து பிறகு அறிக்கை வெளியிட இருப்பதாக திரு சிங் கூறினார்.
முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் 2021ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட ஒருவருக்குத் துணையாக அவருடன் காவல் நிலையத்துக்குச் சென்றிருந்ததாகவும் ஆனால் காவல்துறையினர் அப்பெண்ணின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ளவில்லை என்றும் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அப்போது அவர் செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
இதே கருத்தை திருவாட்டி கான் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் மீண்டும் தெரிவித்தார்.
திருவாட்டி கானின் கருத்துகள் உண்மையற்றவை என்று விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தாம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டவர் என்று திருவாட்டி கான் தெரிவித்தார்.
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டோருக்கான ஆதரவுக் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் ஒருவர் பகிர்ந்துகொண்டதை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததாக 2021ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று திரு கான் கூறினார்.
அதே மாதம் 30ஆம் தேதியன்று அவர் பாட்டாளிக் கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.
திருவாட்டி கானிடம் விசாரணை நடத்த நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் தவறாகப் பயன்படுத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டது.
அவருக்கு $35,000 அபராதம் விதிக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரைத்தது.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங், தலைவர் திருவாட்டி சில்வியா லிம், திரு ஃபைசால் மனாப் ஆகியோரிடம் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தியது.
திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் கூறியது பொய் என்று தெரிந்திருந்தும் உண்மையைப் பேச அவருக்கு வலியுறுத்த திரு சிங் தவறிவிட்டதாக சிறப்பு விசாரணைக் குழு கூறியது.
நாடாளுமன்றத்தில் உண்மையைத் தெரிவிக்கும்படி திருவாட்டி கானிடம் கூறியிருந்தாக விசாரணையின்போது திரு சிங் தெரிவித்தது உண்மையற்றது என்று அது கூறியது.
இதை திரு சிங் மறுத்தார்.
இருப்பினும், உண்மையைச் சொல்ல திருவாட்டி கானுக்குத் தேவைக்கும் அதிகமான நேரம் தந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
திருவாட்டி கான் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர் என்பதால் அவர் மீது பரிதாபம் கொண்டு அவரை அவசரப்படுத்தி நெருக்குதல் தரவில்லை என்றார் திரு சிங்.