சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை அதன் மூலாதார நலன்களுடன் நாட்டின் சுதந்திரம், இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் கொள்கைகளை ஒத்திருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிங்கப்பூரர்களில் பலர் காஸாவில் நிலவும் சூழல் குறித்து ஆழமான கருத்துக் கொண்டிருப்பர் என்பதைத் தாம் அறிந்தாலும் வெளியுறவுக் கொள்கை என்பது உணர்வுகளின் அடிப்படையிலோ வெளித் தரப்பு ஒன்றின் மீது நமக்கு இயற்கையிலேயே இருக்கக்கூடிய ஈர்ப்பின் அடிப்படையிலோ இருக்கக்கூடாது என்று அமைச்சர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் ராணுவ பதில் நடவடிக்கை அளவுக்கு மீறி விட்டதென்று கூறிய அமைச்சர், அதற்காக அந்நாட்டுடனான அரசதந்திர உறவுகளை துண்டித்துக்கொள்வது நிலைமையைச் சரிசெய்யாது என்று தெளிவுபடுத்தினார்.
அது பாலஸ்தீனர்கள் படும் வேதனையைக் குறைத்து விடாது என்றும் அவர் தமது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார்
வெளியுறவு அமைச்சின் செலவினத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துப் பேசிய டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்தப் போர் சிங்கப்பூரர்களிடையே உணர்வுகளை வலுவாகத் தூண்டியுள்ளபோதும் இதனால் நாட்டில் நிலவும் ஒற்றுமை உணர்வு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை பாதிக்கவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
“இது குறித்து நம்மிடையே பலதரப்பட்ட உணர்வுகள் இருக்கும் என்றாலும், இதனால் ஏற்படக்கூடிய மோசமான விளைவு என்னவென்றால், நம்மிடையே ஒருவருக்கு ஒருவர் எதிர்நிலையை எடுத்து சிங்கப்பூரர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது,” என்று தமது நாடாளுமன்ற உரையில் திரு விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன போராளிக் குழு இஸ்ரேல் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது. அதில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டனர்; பலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
அதற்குப் பதிலடி கொடுத்த இஸ்ரேல், காஸா பகுதியை தொடர்ச்சியாக குண்டுமழை பொழிந்து தாக்கியது.
அந்தத் தாக்குதலில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன் பாலஸ்தீனர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
சிங்கப்பூர், இஸ்ரேல் மீதான தாக்குதலை கண்டித்ததுடன் சிங்கப்பூர் தாக்குதலுக்கு உள்ளானால் எப்படி அதற்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளதோ அதுபோல் இஸ்ரேலுக்கும் தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் முன்னர் தமது நாடாளுமன்ற உரையில் கூறியதை மீண்டும் எடுத்துரைத்தார்.