கடந்த 14 ஆண்டுகளாகக் காவடி எடுக்கும் பால் சிங்கிற்கு உறுதுணையாக இருந்துள்ளார் அவரின் பால்ய நண்பர் லயனல் டான், 35. பால் சிங்கின் மூன்றடுக்குக் காவடியை ஆண்டுதோறும் கட்டுவது இவரின் வழக்கமாகிவிட்டது.
பூசைமுறை, அலகு குத்தும் முறை, தைப்பூசத் திருநாளின் சிறப்புகள் ஆகியவற்றை நண்பரின் துணையோடும் தொடர் பங்கேற்பின்மூலமும் அறிந்துகொண்டார் இவர்.
“சிங்கப்பூரில் இந்த அளவில் ஒரு சமய நிகழ்வு நடப்பதும், சண்டை சச்சரவின்றி அனைத்தும் சுமுகமாக இருப்பதும் வியக்கத்தக்கது,” என்கிறார் லயனல்.
முழுநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பல குடும்பங்கள் இன்று தைப்பூசத்தைக் கொண்டாட இணைந்தனர். அப்பா திரு சரவணன் இளங்கோ மூன்றாவது முறையாக அலகுக் காவடி எடுப்பதைக் காண வந்திருந்தனர் 10 வயது அறிவழகனும் அவரின் இரு சகோதரர்களும். இவர்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறையினரும் பாத ஊர்வலத்தில் ஈடுபடவேண்டி விடுப்பு எடுத்திருந்தனர். 40 வயது திரு சரவணின் தாய்வழித் தாத்தா, பின்னர் மாமா என இரு தலைமுறைகளாக நீண்ட பாரம்பரியத்தை இப்போது அவர் தொடர்கிறார். தாத்தாவின் நினைவாக அவர் பயன்படுத்திய மயிலிறகுகளே திரு சரவணனின் காவடியை அலங்கரித்தன.
மனைவி பக்திப் பாடல்கள் பாடுவது, பிள்ளைகள் காவடி கோப்பது, அம்மா பத்திய உணவுகளைத் தயாரிப்பது, உறவினர்கள் ஆதரவளிப்பது எனக் குடும்பமாக தாங்கள் ஒன்றிணைவது இந்த தைப்பூசத்தில்தான் என்றார் திரு சரவணன்.
மோட்டார் சைக்கிள் விபத்து நேரிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தந்தைக்காக அலகு குத்தி பால்குடம் எடுக்கத் தொடங்கியதாகக் கூறினார் 29 வயது ஹேமா தேவி.
இவ்வாண்டு இரண்டாம் முறையாக அவ்வாறு பாத ஊர்வலத்தில் கலந்துகொண்ட அவர், தனக்கு நிச்சயிக்கப்பட்ட திரு மோகன்ராஜுடன் இணைந்து பால்குடம் ஏந்தினார். இருவரும் தங்கள் திருமணம் நல்லபடி நடக்க வேண்டிக்கொண்டனர்.
ஜெர்மனியிலிருந்து வேலை நிமித்தமாக அண்மையில் சிங்கப்பூர் வந்த 60 வயது மார்ட்டினா தைப்பூசத்தை முதன்முறையாக கண்டு மெய்சிலிர்த்தார். கிறிஸ்தவரான அவர், பெருமாள் கோயிலில் அலைமோதிய பக்தி உணர்வையும் குடும்பத்தாரின் அன்பையும் பாராட்டினார். புற்றுநோயுற்ற மனைவிக்காகக் காவடி ஏந்திய ஒரு கணவரைச் சந்தித்தது குறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், அது தன்னை மனம் நெகிழச் செய்ததாகக் கூறினார்.
“சிங்கப்பூரர்களின் ஏற்புத் தன்மையினால் என்னைப் போன்ற வெளிநாட்டவர்களும் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வியக்க முடிகிறது,” என்றார் மார்ட்டினா.
தைப்பூசத் திருவிழாவின் பன்முக பக்தர்களும் பக்தியைக் கொண்டாடி இன்புற்றனர். பிற்பகல் 12:30 மணி அளவில் மழை தூறிக் கொண்டிருந்த நிலையிலும், ஊர்வலம் தடைபடாமல் தொடர்ந்தது.
ஒவ்வோர் ஆண்டும் நம்பிக்கை கூடுகிறது: சீனப் பக்தர் லிம்
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூசத் திருவிழாவில் அலகு குத்தி பால்குடம் ஏந்தி வரும் சீன நண்பர் குழு இவ்வாண்டும் இணைந்தது.
நால்வர் அடங்கிய இக்குழு, தங்களின் தொழில், குடும்பம் சார்ந்த வேண்டுதல்களுக்காக தொடர்ந்து தைப்பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.
“முதன்முதலில் முகத்தில் துளையிட்டபோது வலிக்கவே செய்தாலும், பெரிய பெரிய காவடிகளை தூக்கி செல்லும் பிற பக்தர்களின் அர்ப்பணிப்பைக் காணும்போது அது மறந்துபோனது. இவ்வழிபாட்டில் ஒவ்வோர் ஆண்டும் எனக்கு நம்பிக்கை கூடுகிறது,” என்றார் அவர்களில் ஒருவரான 65 வயது திரு லிம் எங் கின்.
பக்தர்களுக்கு உற்சாகமூட்டிய அமைச்சர்
காலை 9 மணி அளவில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு வருகை புரிந்த தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, பக்தர்களின் ஆயத்த நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். அவரோடு, மேயரும் ஜாலான் புசார் - கிரேத்தா ஆயர் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெனிஸ் ஃபுவாவும் இணைந்துகொண்டார்.
அலகு குத்துதலின் நுணுக்கங்களை நேரில் கண்டு, காவடி ஏந்துவோரை அமைச்சர் ஜோசஃபின் டியோ உற்சாகப்படுத்தினார். அவர்களின் குடும்பத்தாரையும் கண்டு, காவடி எடுக்கும் பக்தர்களின் மிகுந்த மனவலிமையை அவர் பாராட்டினார்.
விரதம், பத்திய உணவுமுறை, பிற சவால்கள் ஆகியன குறித்து குடும்பத்தார் பகிர்ந்துகொள்ள, அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர், பாரம்பரிய இசைக்குழுக்களில் உள்ள இளம் கலைஞர்களையும் சந்தித்து அவர்களைப் பாராட்டினார்.
அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் அமைச்சர் பால்குடத்தைக் கையில் ஏந்தி கோயில் உட்புறத்தை வலம் வந்து வணங்கினார்.