கார்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கான வாகன உரிமைச் சான்திறதழ் கட்டணங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளன.
இவற்றைக் கட்டுப்படுத்திக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
2026, 2027ஆம் ஆண்டுகளில் கட்டாயம் காலாவதியாகும் வாகன உரிமைச் சான்றிதழ்களைக் கணக்கில் எடுத்து தற்போது கூடுதல் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு தவிர்க்கப்படுகிறது. இந்த கொள்கைக்கு ஏற்றாற்போல் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் மூலம் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் குறையக்கூடும் என்று நம்பப்படுகிறது.
“ எதிர்வரும் காலாண்டுகளில் ஒதுக்கப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்கள் எண்ணிக்கை அடுத்த ஆண்டிலும் 2026, 2027 ஆண்டுகளிலும் தொடர்ந்து அதிகரிப்பதை உறுதி செய்வோம்,” என்றார் திரு சீ.
வாகன உரிமைச் சான்றிதிதழ் கட்டணங்கள் சந்தை நிலவரத்தைப் பொறுத்து இருப்பதாக திரு சீ கூறினார்.
சந்தை நிலவரம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றார் அவர்.
“நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். அடுத்த சில வாகன உரிமைச் சான்றிதழ் ஏலங்களின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை முன்னுரைப்பது சாத்தியமல்ல. ஆனால் இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்று உறுதி அளிக்கிறோம்,” என்று திரு சீ தெரிவித்தார்.
எதிர்காலத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள வாகன உரிமைச் சான்றிதழ்களை முன் கொண்டுவரும் அணுகுமுறையை நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த மே மாதம் முதல்முறையாகக் கடைப்பிடித்தது. அது ஒருமுறை நடத்தப்படும் நடவடிக்கை என்று அது தெரிவித்தது.
கடந்த ஆறு மாதங்களில் வாகன உரிமைச் சான்றிதழ் எண்ணிக்கையை அதிகரிக்க இது உதவியபோதும் வாகனங்களுக்கான தேவை வலுவாக இருப்பதாகவும் சிஓஇ கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் திரு சீ தெரிவித்தார்.
எனவே, வெள்ளிக்கிழமையன்று கூடுதல் சிஇஓ சான்றிதழ்களை ஆணையம் முன்கொண்டுவந்தது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கார்களுக்கும் சரக்கு வாகனங்களுக்கும் கூடுதலாக 1,614 சான்திறதழ்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அடுத்த மூன்று மாதங்களில் சிறிய, பெரிய கார்களுக்காக கூடுதலாக 35 விழுக்காடு சான்றிதழ்கள் ஒதுக்கப்படும்.
சரக்கு வாகனங்களுக்காக கூடுதலாக 65 விழுக்காடு சான்றிதழ்கள் ஒதுக்கப்படும்.
இதற்கிடையே, வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அதிகரிப்புக்கு கார் குத்தகை நிறுவனங்கள் காரணமாக இருப்பது சாத்தியமில்லை என்று என்று திரு சீ தெரிவித்தார்.
கார் குத்தகை நிறுவனங்களிடமிருந்து கார்கள் குத்தகைக்கு எடுக்கப்படுவது குறைந்துள்ளபோது வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அதிகரித்திருப்பதை திரு சீ சுட்டினார்.