புதுடெல்லி: உடல் எடையைப் படிப்படியாகவே குறைக்கவேண்டும் என்றும், உடல்பருமனைக் குறைக்க மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.
அண்மையில் உடல் ஆரோக்கியம் தொடர்பாக மன்றம் சில வழிகாட்டி முறைகளை வெளியிட்டது.
அனைத்து வகையான ஊட்டச்சத்துகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.
வாரத்துக்கு அரை கிலோ எடையைக் குறைப்பது பாதுகாப்பானது என்றும் ஆரோக்கியமான எடையில் இருக்க, காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மன்றம் பரிந்துரைத்துள்ளது.
சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட பொருள்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் உடற்பயிற்சி, யோகா போன்றவை உடல் எடையைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சிறந்த வழி என்றும் அது குறிப்பிட்டது.
இந்தியாவில் உள்ள மொத்த நோய்களில் 56.4 விழுக்காடு ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுவதாக மன்றம் தெரிவித்தது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில பரிந்துரைகளை அது வழங்கியுள்ளது.
உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். எண்ணெய்யில் பொறித்த, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக ஊட்டச்சத்து மிகுந்த கடலை வகைகள், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
கோழி, கொழுப்பில்லா இறைச்சி, மீன் ஆகியவை ஆரோக்கியமானவை என்று மன்றம் ஆலோசனை வழங்கியது.
இனிப்புகளையும் பொறித்த உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் அது கூறியது.