ஸ்ரீநகர்: இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் இந்தக் கனமழை மேலும் சில நாள்களுக்குத் தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கனமழை காரணமாக ஜீலம் நதியின் துணை நதியான சீலு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குப்வாரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாவட்டத்தில் இருந்து 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆடுகள் உள்ளிட்ட ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
மலை மாவட்டங்களான தோடா, ரியாசி, கிஷ்த்வார், ராம்பன், காஷ்மீரின் குப்வாரா ஆகிய பகுதிகளில் கனமழை, இடி காரணமாக 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகள், காஷ்மீர் பல்கலைக்கழகம் ஆகியவையும் மூடப்பட்டன.
செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குப்வாரா மாவட்டத்தில் ஷும்ரியால் பாலம், கும்ரியால் பாலம், ஷத்முகாம் பாலம் உள்ளிட்ட சில முக்கிய பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. தோபான் கச்சாமா அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
பாரமுல்லா, புல்வாமா, அனந்த்நாக், காஷ்மீரின் பிற மாவட்டங்கள் மற்றும் ஜம்மு பிரிவின் சம்பா, கத்துவா மாவட்டங்களில் முக்கிய சாலைகள், பல்வேறு இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஜீலம், சிந்து உட்பட அனைத்து ஆறுகளும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள், மலை நீரோடைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புநிலையில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையத் தகவலின்படி காஷ்மீரின் பல பகுதிகள், ஜம்முவில் சில இடங்களில் மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகளை சீர்செய்யும் பணியிலும் பொதுமக்களை வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்கும் முயற்சியிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.