இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் ஆறு வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
இந்தியாவின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இரு கட்டங்களாக கடந்த 19ஆம் தேதியும் 26ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
வெளிமணிப்பூரில் நான்கு வாக்குச்சாவடிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்துச் சேதப்படுத்தினர்.
இரு வாக்குச்சாவடிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறலாம் என்ற அச்சுறுத்தல் நிலவியதால் அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
இதுபோல் வன்முறைச் சம்பவங்கள், அச்சுறுத்தலால் வாக்குப்பதிவு தடைப்பட்ட ஆறு வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தபடி செவ்வாய்க்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.