விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் சனிக்கிழமை இரவு நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சுத் தாக்குதலில் காயமடைந்தார்.
இதில் ஜெகனின் இடது புருவத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பேருந்தில் இருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் ஜெகனுக்கு அருகிலிருந்த சட்டமன்ற உறுப்பினர் வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளர்களுக்காக சிங் நகர் தாபா கோட்லா நிலையத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர முதல்வர்மீது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் ஆந்திர மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய, தான் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.